நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேக்கறி உற்பத்திகளில் மாற்றம்

சனி, 21 ஆகஸ்ட், 2021

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேக்கரி உற்பத்திகளுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரை இறாத்தல் பாண் – பருப்புக் கறி 150 ரூபாவாகவும் பிளேன் ரீ 25 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் உணவகங்களின் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அச் சங்கம் கூறியுள்ளது. இந்நிலையில் சீனி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து பேக்கரி பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கான முடிவு நியாயமானது என அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

பாண் மற்றும் பிற பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிப்பதற்கான பேக்கரி உரிமையாளர்களின் முடிவு அரசாங்கத்தையோ அல்லது பொதுமக்களையோ சிரமப்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் கூறினார்.

பேக்கரி பொருட்களில் பயன்படுத்தப்படும் பண்டங்களின் விலை உயர்வு காரணமாக தொழில் சிக்கலில் இருப்பதாகவும், எனவே இந்த நடவடிக்கை நியாயமானது என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசியத் தேவைகளுக்காக சிறிய அளவிலான கடைகள் மாத்திரமே திறக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்றினால் உணவகங்கள் பல மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடைகளில் விற்கப்படும் அரை இறாத்தல் பாண் மற்றும் பருப்புக் கறியின் விலையானது 150 ரூபாவாகவும் பிளேன் ரீஒன்றின் விலையானது 25 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக