மகள் தனது திருமணத்திற்கு பின் தாயிற்கு எழுதிய கடிதம்

ஞாயிறு, 18 மார்ச், 2018

நானும் எல்லா பெண்களை போலவே நான் தெரிந்துகொண்டவரை உங்கள் சம்மதத்தோடு பல்வேறு அர்த்தங்கள் மறைந்திருக்கும் உங்கள் கண்ணீருக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டேன். திருமண வாழ்க்கைக்கு பின்புதான் தெரிந்தது உங்கள் கண்ணீருக்கு அர்த்தங்கள் என்னவென்று.
எத்தனை பொறுப்புகள் !
எத்தனை சுமைகள் !
எத்தனை தியாகங்கள் !
எத்தனை ஏமாற்றங்கள் !
எத்தனை கடமைகள் என்று...
நான் உங்களிடம் இருக்கும் பொழுது என் சோம்பலையும் 
அழகாய் பார்த்தீர்கள்.
ஆனால் இங்கு, என் தூக்கத்தை தியாகம் செய்து நான் செய்யும் வேலைகளை கவனிக்கவும் யாருக்கும் நேரமில்லை.
எனக்கு பிடிக்காததையும், பிடித்ததை போலவே நடித்துக்கொண்டிருக்கிறேன்.
யாராவது என்னை குறை சொல்லிவிடுவார்களோ என்ற பயம் அவ்வப்போது வந்து செல்கிறது. பண்டிகை காலத்திலும், என் பிறந்த நாட்களிலும் நீங்கள் தேடி தேடி வாங்கி தந்த ஆடைகளை இங்கு நான் உடுத்த முடியாமல் காட்சி பொருளாய் கிடக்கிறது.
அவற்றை அனைத்துக்கொண்டே உங்களது பாசத்தினை சுமந்து 
வருகிறேன் அம்மா.
உங்களிடம் சண்டையிடும் பொழுது, நான் உரிமையோடு சத்தம் போட்டால் , என்னை திட்டுவதை விட்டுவிட்டு நீங்கள் அமைதியாய் செல்வீர்கள். ஆனால் இங்கு எனக்கு வலி ஏற்பட்டாலும் மௌனம் காக்கிறேன்.
சில நேரங்களில் உன்னிடம் இருந்த போதே நான் மகிழ்வாக இருந்தேனே! உன்னோடு வந்து விடலாமா என்று கூட தோன்றுகிறது. உன் மடியில் படுத்துக்கொள்ளவேண்டும் எனவும் தோன்றுகிறது.
எந்த கவலையும் இல்லாமல் உன் அரவணைப்பில் உன் கொஞ்சலில் உன் பாதுகாப்பில் இருந்திடக்கூடாதா என்று நினைக்கிறன்.
ஆனால் அடுத்த கணமே நீயும் என் வயதில் என்னை போலத்தானே உணர்ந்திருப்பாய். நீ உன் திருமணத்தில் செய்த தியாகம் தானே எனக்கு இந்த அழகிய நினைவுகளை கொடுத்திருக்கிறது.
நீ அன்று நான் நினைப்பது போல் நினைத்திருந்தால் நான் இன்று இருப்பேனா? நீ செய்த தியாகங்களையும் உழைப்பையும் எதிர்பாரா அன்பையும், நான் திருப்பி தர வேண்டாமா என்று நினைத்துக்கொள்கிறேன்.
அப்படி நினைக்கும் பொழுது வாழ்க்கையே எளிதாக தெரிகிறது. காலம் செல்ல செல்ல நீ உன் குடும்பத்தை நேசித்தது போல நானும் என் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்துவிடுவேன்.
இனி நானும் நீ செய்த தியாகங்களை என் குடும்பத்திற்கு செய்ய தயாராகிவிடுவேன். ஆமாம் நீ எனக்கு கொடுத்ததை நானும் என் குடும்பத்திற்கு கொடுக்க தயாராகிவிட்டேன்.
நன்றிம்மா!!!
என்றும் அன்புடன் உன் ஆசை மகள்.....
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக