இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் அரிசி விலை தொடர்பான செய்தி

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

இலங்கையில் சந்தையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது.இதற்கமைய, புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ நாட்டரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 150 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 220 ரூபாவுக்கும் விற்பனை 
செய்யப்படுகின்றன.
இந்தப் பின்னணியில் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இந்தியாவிலிருந்து மாத்திரமின்றி பாகிஸ்தான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்தும் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.கடந்த காலங்களில் அரிசியின் விலை அதிகரித்து காணப்பட்டது.இதனையடுத்து, அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டதோடு, சந்தையில் ஏற்பட்ட அரிசி தட்டுப்பாடு 
காரணமாக அது நீக்கப்பட்டது.
இந்நிலையில் அரிசி ஆலை உரிமையாளர்களால் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டதோடு ஒரு கிலோ நாட்டரிசி 115 ரூபா எனவும், ஒரு கிலோ சம்பா அரிசி 140 ரூபா எனவும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 165 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டது
எவ்வாறாயினும் குறித்த விலையை மீறி அதிக விலைகளில் சந்தையில் அரிசி விற்பனை செய்யப்படுகின்றது.அதிகரித்த அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் டன் அரிசியை கட்டம் கட்டமாக இறக்குமதி
 செய்வதற்கு 
நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசி சதோச ஊடாக விற்பனை செய்யப்படுவதோடு, நுகர்வோருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் 5 கிலோ அரிசி மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் எனவும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக